Monday 30 December 2013

   இணையத்தில் கடவுளின் ஆசியுடன் அவனைப் பறறியே என் முதல் பதிவு!


    தன் பெருமைகளை விட பக்தனின் பெருமையை கேட்பதுதான் பகவானுக்கு
 பிடிக்குமாம். எண்ணில் அடங்காத அவன் பக்தர்களில் முதன்மையில் உள்ளவர்கள் நம்மைப்போல் பூமியில் தோன்றிய பன்னிரு ஆழ்வார்கள்.

இதில்" மாதங்களில் நான் மார்கழி  "என்று  கீதாசார்யனால் சொல்லப்பட்ட இம் மார்கழியில் பேசப்படுபவள் கோதை. ஆழ்வார்களில் ஒரே பெண். நாராயணன் மேல் தீராத காதலாலும் பக்தியாலும் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடியவள்.

   நம் கோதை போன்றே வட நாட்டில் இருந்த இன்னும் இருவர் சித்தௌட் ராணியான மீராவும் ஆயர்பாடியின் ராதாவும. இம்மூவரும் கண்ணன் மேல் தீராத காதல் கொண்டவர்கள்.

         இம்மூவரில் முதலில் தோன்றிய ராதாவைப்  பற்றிப் பார்ப்போம்.

                                                     
      ராதா கண்ணன் பிறந்த துவாபர யுகத்தில் அவனுடைய காலத்திலேயே பிறந்தவள் எனறு ஸகந்த புராணத்தில் காணப்படுகிறது.
        
      வ்ருஷபானு மற்றும் கீர்த்திகுமாரி தம்பதிகளின் முன்ஜன்ம பிரார்த்தனையின்படி  மஹாலக்ஷ்மியே ராதாவாக பிறந்தாள் என்றும் நாரதமுனிவரே அவள் பிறக்கும்போது வந்து ஆசீர்வதித்து அவள் தெய்வீக அம்சம் பொருந்தியவள் என்று சொன்னதாகவும் வ்ரஜ்வாசிகள் நம்புகின்றனர்.

         கண்ணனின் தந்தை நந்தனும் வ்ரஷபானுவும் நண்பர்களானதால் ஒரு ஹோலிப்பண்டிகையின் போது சிறுமி ராதாவும்  சிறுவன் கண்ணனும் சந்திக்கின்றனர். அன்றிலிருந்து கண்ணன் ராதாவாலும் ராதா கண்ணனாலும் ஆட்கொள்ளப்படுகின்றனர்.

  இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருந்தனர்.கண்ணனுடன் ராசக்ரீடைகள் செய்யும் கோபியருக்கு  தலைவியாக திகழ்ந்த  ராதா, அவனின்  சக்தியாகவும்  உள்ளார்ந்த ஆற்றலாகவும் விளங்கினாள்.

  பிரபஞ்சமே வசீகரிக்கும் கண்ணனை வசீகரிப்பவளாய் ராதா இருந்ததால் , அவளுக்கு கோவிந்த-ஆனந்தி, மற்றும் கோவிந்த-மோகினி என்ற பெயர்களும் உண்டு

  கண்ணன் 10 வயதில் ஆயர்பாடியை விட்டு சென்று விடுகின்றான்.ஆனால் வரஜ்வாசிகளால் ஸ்ரீமதி ராதாராணி என்று இன்றளவும் அழைக்கப்படும் ராதை அம்மக்களுடனே தங்கி கண்ணனின் பத்தினியாகவே வாழ்ந்தாள்
  
  கண்ணன,வேறு அவள் வேறு இல்லை,அவளே கண்ணன்,கண்ணனே அவள் என்று நினைத்ததால்  அவன் பிரிந்து சென்ற பிறகும் அவள் ராதாகிருஷ்ணனாகவே தன்னைப் பார்த்தாள், ப்ருந்தாவனவாசிகளுக்கும் இன்றளவும் அவ்வாறே தெரிகிறாள்.

  வியாசரின் பாகவத புராணத்திலோ மஹாபாரதத்திலோ  ராதாவைப் பற்றி  குறிப்பிட்டு   எதுவும்  இல்லை.  கோபியர்கள் கண்ணனுடன் ராசலீலை ஆடினர் என்று தான் உள்ளது. ஸ்கந்தபுராணத்தில் தான் கோடிக்கணக்கான கோபியர்களின் தலைவியாக ராதா திகழ்ந்ததாகவும் அவள் லக்ஷ்மிதேவியின் அம்சம் என்றும் கூறப்பட்டுள்ளது்.

  வல்லப மற்றும் கௌடிய வைஷ்ணவப் பிரிவை சேர்ந்தவர்கள ராதாவை லக்ஷ்மியின் அவதாரமாகக் கருதி ராதாகிருஷ்ணனுக்கு தான் பூஜை செய்கின்றனர். பின் நாட்களில் ஜெயதேவர் தான் தம்முடைய கீத கோவிந்தத்தில் ராதாவைப் பற்றி விஸ்தாரமாக எழுதியுள்ளார்.

  சைதன்ய மஹாபிரபுவும் ராதாகிருஷ்ணனையே ஆராதித்தார்.வ்ரஜ்பூமியின் உயிராக கண்ணனையும் ஆத்மாவாக ராதாவையும் இவர்கள் கூறுகின்றனர்.

  பர்ஸானா மறறும் வ்ருந்தாவன்தில் ராதாகிருஷ்ணனுக்கு கோயில்கள் உண்டு


.
         இனி கி.பி.8ம்  நூற்றாண்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரி்த்த நம்
                                                                கோதை

     நாராயணனுக்கே பல்லாண்டு பாடி பெரியாழ்வார் என்று பெயர் பெற்ற விஷ்ணுசித்தரின் துளசி வனத்தில் ஆடிப்பூரத்தன்று அவரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவள்  பூமாதேவியின் அம்சமான  கோதை.சிறு வயது முதலே விஷ்ணுவின் கதைகளும் திவ்யதேச பெருமையும் கூறி அவளை கண்ணனின் பக்தையாக ஆக்கினார் பெரியாழ்வார்.

  அவர் தினமும் வடபத்ரசாயி பெருமாளுக்கு தொடுக்கும் மாலையை சிறுமி கோதை தான் அணிந்து பகவானுக்கு நன்றாக இருக்குமா என்று கண்ணாடியில் பார்த்து பிறகு திருப்பி வைத்து விடுவது வழக்கம்.ஒருநாள் இதை நேரில் பார்த்து விட்ட விஷ்ணுசித்தர் கோபத்தில் கோதையை கடிந்து கொளகிறார். அவள் சூடியமாலையை நிராகரித்து விட்டு  அவர் புதியதாக தொடுத்து சாற்றிய மாலையை பகவான் ஏற்கவில்லை. கண்ணன் அவர் கனவில் தோன்றி கோதை சூடிய மாலையே தனக்கு மிகவும் பிடிக்கிறது என்றும், தினமும் அப்படியே சாற்றவேண்டும் என்றும் கட்டளை இடுகிறான்.

  அன்றிலிருந்து கோதை ஆண்டாள் என்றும் சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் பெயர் பெற்றாள்.

     இன்றும் திருப்பதி ஸ்ரீநிவாசனின் ப்ரஹ்மோத்சவத்தின் கருடசேவையன்று ஆண்டாள் சூடியமாலை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அனுப்பப்பட்டு பெருமானுக்கு சூட்டப்படுகின்றது.

  ஆண்டாளுக்கு 15 வயது நிரம்பியதும் பெரியாழ்வார் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். ஆனால் அவள் தான் மணந்தால் கண்ணனையோ அல்லது அவனின்  அர்ச்சாவதாரமாகிய ஸ்ரீரங்கநாதனயோ தான் மணப்பேன் என்று கூறிவிடுகிறாள்.அர்ச்சாவதார மூர்த்திக்கு எப்படி மணமுடித்து கொடுக்க முடியும் என்ற கவலை பெரியாழ்வாரை வாட்டியது.

  அப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த ஒரு பாகவதரின் உபன்யாசத்தில் கோபியரெல்லாம் கண்ணன் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றும் அவனுககு சேவை செய்ய வேண்டும் என்றும்   மண்ணால் ஆன காத்யாயினி தேவியி்ன் சிலைக்கு(பாவை) பூஜை செய்து உபவாசம் இருந்ததைக் கோதை கேட்டாள். உடனே தானும் அவ்வாறே விரதம் இருக்க எண்ணி, ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாகவும் அங்குள்ள பெண்களை கோபியராகவும் கற்பனை செய்துகொண்டு, அப்பெண்களை நீராடவும் , பூஜை செய்யவும்  அழைப்பதாக அமைந்த பாடல்கள் தான் நாம் ஒவ்வொரு மார்கழியிலும் பாராயணம் செய்யும் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உள்ள 'திருப்பாவை' 30ம்

                               "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய்" .....      
    
  என்று தொடங்கி,                              


                             " செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
                               எங்கும் திருவருள் பெற்றின்புறுவ ரெம்பாவாய்"


என்று நம்மை ஆசீர்வதித்து திருப்பாவையை முடிக்கிறாள்.

  அவள் கண்ணனையே கணவனாக அடைய நினைத்து ஏங்கி அவன் மேல் கொண்ட காதலாலும் பக்தியாலும் பாடிய பாடல்கள் தாம் மற்றுமொரு பிரபந்தமான" நாச்சியார் திருமொழி " 140 ம்.
         
   ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் 7ம் பத்தில் முதல் பாடல்,

"கற்பூரம் நாறுமோ ,கமலப்பூ நாறுமோ ,
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ
 மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
                           விருப்புற்றுக் கேட்கி்றேன் சொல்லாழி வெண்சங்கே!"

     அவள் கணணன் மேல் கொண்ட காதலுக்கு எடுத்துக்காட்டு.

      சிறிது காலம் கழிந்தவுடன் அவள் பக்தியையும் சிரத்தையையும் அறிந்த ஸ்ரீரங்கநாதன் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி கோதையை தன்னிடம் அழைத்துவரும்படி உத்தரவிடுகின்றான்.

 ஆழ்வாரும் அவளை அழைத்துக் கொண்டு அரங்கனின் கோயில்  செல்கிறார்.
அங்கு சென்றவுடன் ஆண்டாள்  கர்ப்பகிரகத்துள் சென்று அப்பெருமானுடனே ஐக்கியமாகி மறைந்து விடுகிறாள்.

                                       " மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
                                         முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்  
                                        மைததுனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக்
                                        கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்
                            

எனறு ஆயர்மகனை  தான் கனவில் கண்டதைப்  போலவே கைப்பற்றி அவனுடன் ஒன்றாகி விட்டாள்.
       
     இன்றும் நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வைஷ்ணவ திருமணத்திலும் மணப்பெண்ணிற்குக் கூரைப்புடவை உடுத்தும் போதும் தேங்காய் உருட்டு்ம் போதும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியின் 6ம் பத்தான "வாரணமாயிரம்"  பாடல்களை இசைக்கின்றனர்.

                                                              சமீபத்தில் தோன்றிய மீரா    

                                                        
                          ராஜபுதனத்து 
 இளவரசியான மீரா 1498ல்  மெர்தா என்ற ஊரை ஆண்ட ரதன்சிங்கிற்கு மகளாக பிறந்தாள்.7 வயதில் தாயை இழந்த மீரா தாத்தாவின் வீட்டில் வளர்ந்தாள்.  .அங்கு அவளுக்கு ஒரு கிருஷ்ண விக்ரகம் ஒரு பாகவதரிடமிருந்து கிடைக்கிறது்.(சிலர் வேறு மாதிரியும் சொல்வர் சிறு வயதில் ஒரு கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளையை பார்த்துவிட்டு  அவள் தன் தாயிடம் தன்னுடைய மாப்பிள்ளை யார் என்று கேட்டதாகவும் அவள் தாய் இந்த கிருஷ்ணர் பொம்மையை கொடுத்து இவர் தான் உன் கணவர் என்று சொன்னதாகவும் கூறுவர்).

   சிறுமி மீராவால் கிருஷ்ண விக்ரகத்திற்கு சரிவர பூஜை செய்ய 
  முடியாததால் அந்த பாகவதர் அதை திரும்ப எடுத்து சென்று விடுகிறார் .அதைத் தாங்க முடியாத மீரா  கிருஷ்ண பொம்மையை திரும்பப்பெற தன் தோழியுடன்  அவர்  வீட்டுக்குச் செல்கிறாள். அங்கு விக்ரகமாக உள்ள கண்ணன்   எந்த பிரசாதத்தையும் ஏற்க மறுக்கிறான் .பாகவதரும் கண்ணனின் உளம் அறிந்து மீராவுக்கே அவனை கொடுத்து விடுகிறார்.
  
     அதிலிருந்த அவள் வாழ்வில் எல்லாமே கிருஷ்ணனாக ஆகிவிடுகிறது. மீராவின் தந்தையும்  கண்ணனை தினமும் ஆராதிப்பவராக இருந்ததால் அவளுக்கு கண்ணன் மேல் பக்தி கூடிக் கொண்டே போனது. மீரா சாகும்வரை அந்த விக்ரகத்தை பிரியவில்லை.

    மீராவுக்கு 18 வயது நிறையும்போது  சித்தௌடின் இளவரசனான போஜராஜனுடன் அவள் திருமணம் நிகழ்கிறது. ஆனால் அவள் கண்ணனை தன் கணவனாக வரித்ததால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததோடு கணவனிடமிருந்து விலகி இருந்து கிருஷ்ண பஜனையுடன் தன் காலத்தை கழித்தாள். சித்தௌட் அரண்மனையில் அவளின் இந்தச் செய்கை புகுந்தவீடடாருக்கு அவள் மேல் வெறுப்பை உண்டாக்கியது.மீராவின் கணவன் அவளுக்கு ஆறுதலாக இருந்து உலக இன்பத்தில் அவளை ஈடுபடுத்த முயன்றா ன்.

 ஆனால் 1521 ம் வருடம்  போஜராஜன் போரில் இறந்து  விடுகிறான். அதன் பிறகு புகுந்த வீட்டார் அவளுக்கு மிகவும் துன்பம் விளைவித்தனர். அதை மறக்க கண்ணனிடமே சரணடைந்தாள் மீரா. தினமும் இராத்திரி வேளையில் அரண்மனையை விட்டு வெளியேறி தன் நினைவின்றி கிருஷ்ண பகதர்களுடன்  பஜனை இசைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தாள். ஒரு விதவையான ராஜபுதன இளவரசி செய்யக்கூடாத காரியமாக அரண்மனையி்ல் உள்ளோர் இதை நினைத்தனர்.மேலும் அவள் மைத்துனன் விக்ரமாதித்யா பலமுறை அவளை கொல்ல முயன்றும் கண்ணனால் தான் காப்பாற்றப்பட்டோம் எனறு மீரா தன் பஜனைகளில் தெரிவி்த்திருக்கிறாள்.

       தனக்கு அபயம் அளித்த மாமனாரும் இறந்த விட,கஷ்டங்களை தாங்க முடியாமல்  சித்தௌட்  அரண்மனையைத் துறந்து பிறந்தகம் செல்கிறாள். அவர்களாலும் கைவிடப்பட்டு ஊர் ஊராக  பஜனை செய்து கொண்டு  கிருஷ்ண பக்தியின் இருப்பிடமான வ்ருந்தாவனத்தை அடைகிறாள்.

       மீரா தன்னை கண்ணனின் கோபியரில் ஒருவளான லலிதாவின் மறு பிறப்பாக எண்ணிக்கொண்டு பஜனை செய்து காலம் கழிககிறாள்.அங்கும் நிம்மதி கிடைக்காமல் யாத்திரையாக காசி சென்று சிறிது காலம் தங்கி கடைசியில் துவாரகாவை அடைகிறாள். 

       1557ம்  ஆண்டு  நல்லவனான மீராவின் மற்றொரு  மைத்துனன் உதய்சிங் சித்தௌட்கட்டின் அரசனானவுடன் அவளை திரும்பவும் தன் அரண்மனைக்கே அழைத்துவரப்  பிராமணர்களை அனுப்பினான். அவர்களிடம் மீரா கிருஷ்ணனின் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி துவாரகாநாதனின் கோயில் உள்ளே சென்று கண்ணனுடன் ஐக்கியமாகி விடுகிறாள்.

ஊர் உலகத்தை பற்றி கவலைப்படாமல் இளவரசி போலவும் வாழாமல் நிலையற்ற உலக உறவுகளிலும் பொன் பொருளிலும் ஆசை வைக்காமல் தன் மனது சொன்னபடி வீதியில் ஆடிப்பாடி கிருஷ்ண பக்தியே ஒரு உருவமாக வந்தது போல் வாழ்ந்தவள் மீரா.

      அவள் ப்ரஜ் மற்றும் ராஜஸ்தானி மொழிகளைக் கலந்து 1300 கிருஷ்ண பஜனனைகளை இயற்றியுள்ளாள்.

                                மீரா பஜனைகளில் பிரசித்தமானவை


 "மேரே தோ கிரிதர் கோபாலு,தூஸ்ரா ன கோயி......."

 "ஹே கோவிந்து ஹே கோபாலு.......",

 "தும் பின் மோரி கௌன் கபர் லே......"
 
 "பாயோஜி மைனே ராம் ரதன் தன் பாயோ...."

 "ஐசி லாகி லகன்....."   போன்றவை.

               கண்ணனைத், தன்னில் பாதியாக நினைத்த ராதா, கணவனாக நினைத்த கோதையும்  மீராவும், அவனுடைய தெய்வீகக் காதலிகள் தான். இவர்களின் ஆசி புத்தாண்டில் நம் எல்லோருக்கும் கிட்டட்டும்.
                                   
              பெரியோர்களே தயவு செய்து என் தவறுகளை சுட்டிக்காட்டி என்னை வளர்த்து விடுங்கள்! நன்றி!