Saturday 4 October 2014

                                                நானாவித நவராத்திரிகள்



       எல்லா இந்தியர்களுக்கும் முக்கியமான பண்டிகை  நவராத்திரி இன்னிக்கு தான் முடிவுக்கு வந்துருக்கு

         குழந்தைகள் இல்லைனா வேலையுமில்ல. வெட்டியா இரு்கும் போது மனம் அவலை அசை போடத் தொடங்கி விட்டது.

       சின்ன வயசுல ஊர்ல அனுபவித்த நவராத்திரி கொலு ஞாபகம் தான் முதலில் மனசுல வரது.

       நவராத்திரி வந்தாச்சுன்னா எங்களுக்கெல்லாம் தீபாவளிய விட கொண்டாட்டமா இருக்கும்

      பள்ளி்க்கு காலாண்டு விடுமுறைங்கறது  ஒண்ணு,  பரிட்சை அப்ப தான் முடிந்திருக்கும் அதனால படிக்க வேண்டாம்கறது  இன்னொண்ணு.  மேலும் பெரியவர்கள் வீடு ஒழிச்சுவதிலும் சுண்டலிலும் பிஸி. நம்மை மிரட்ட யாரும் இருக்கமாட்டார்கள்ங்றது வேற.

       மஹாளய அமாவாசையன்று வீடு ரெண்டு படும். ரயில் பொட்டியாட்டம் இந்த தெருவிவிருந்து அந்த தெரு வரை இருக்கும் கிராமத்து வீட்டை ஒழி்ப்பது சாதாரணம் இல்லை.

      நெல்லுத் தொம்பைகளை அகற்றி, கொலுவுக்கு இடம் ஒழிச்சணும். பிறகு அரிசி ட்ரம்களை முதல்  படியாகவும், ஸ்டூல்களை 2ம் படியாகவும், ப்ரிட்டானியா பிஸ்கட் டின்களை 3ம் படியாகவும்,செங்கல்களை வைத்து மத்த 2 படிகளையும் அமைத்து, அப்பா தாத்தா வேஷ்டிகளை போட்டால் ஆச்சு கொலுப்படிகள்.

     பொம்மைகள் மட்டும் என்ன அமெரிக்கா, சிங்கப்பூரிலிருந்தா வரவழைப்பார்கள்? .20,30 வருஷப் பழசு மரப்பாச்சிகள்,சோழிகள்,தலையாட்டி பொம்மைகள், அம்மா சித்திகள் செய்த மணி, ஒயர் பொம்மைகள் வைத்தால் ஆயிற்று கொலு.


     தட்டுல கொஞ்சம் மணல தூவி கேழ்வரகு விதைச்சா,பார்க் ரெடி.இன்னும் கொஞ்சம் அழகாக்கணும்னா? இருக்கவே இருக்கு ஜவ்வரிசி ஒட்டின முத்தாலத்தி தட்டு.

    சுண்டல்னா தினுமும் அந்த கருப்புக்கடலை சுண்டல்தான். ஒரு நாள் பட்டாணியோ,நிலக்கடலையோ கண்ணுல காட்ட மாட்டாங்க.
      இருந்தாலும் தாழம்பூவோ இல்ல கோயில் மாலைல இருந்து கிடைத்த சாமந்தியோ வைத்து தைத்த ஜடைல குஞ்சலமும், பட்டுப் பாவாடையுமா வீடு வீடா ஓடின நாட்கள் வாழ்க்கையின் தேன் தடவிய நாட்கள் .
       கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்குப் போன கொஞ்ச நாளிலேயே தசரா ஆரம்பமாச்சு .சரி கொலு,வெத்தல பாக்கு சுண்டல்னு இருக்கப் போகுதுன்னு பார்த்தா,கொலு வழக்கமே இல்லைன்னுட்டாங்க மாமியார்.

     கணவரும் கல்யாணத்துக்கு முன் அம்மா கூட இல்லாமல் தனியாக இருந்ததால் தமி்ழ்க்காரங்களையும் அவ்வளவா தெரியாது.
      ( பிறகு கொஞ்ச நாளிலேயே மாமியாரும் நானும் நம்ம கோயில் போக ஆரம்பிச்சு, தமிழ்காரங்களோட ஜோதில கலந்து,

கொலு இல்லாட்டாலும் சுண்டல் வெத்தல பாக்கு ரவிக்கை துணி கொடுக்க ஆரம்பிச்சுட்டோம்கறது வேற கதை.)

     அதனால   பக்கத்தில் உள்ள குப்தா, ஸ்ரீவஸ்தா,   மிஸ்ரா வீடுகளில் கொண்டாடும் முறையிலேயே நானும் கொண்டாடினேன்.
          8 நாளும் உபவாசமிருநது, விடிகாலையில் தேவி மந்திர்ல ஜலம் சமர்ப்பித்து, நவமி அன்னிக்கு பெண் குழந்தைகளுக்கு விருந்து வைத்து பரிசு கொடுத்து வணங்கி வழிபடும்  'கன்யா போஜன் 'உடன் உபவாசத்தை முடிக்கும் நார்த்இண்டியன் வழக்கப்படி நவராத்திரி கொண்டாட ஆரம்பித்தாயிற்று.
      நவராத்திரி ஆரம்பித்து 4,5 நாள் கழித்து தசரா பார்க்கப்போனோம். நம்மால கற்பனையே பண்ண முடியாத அளவுல காளி,துர்கா,தேவின்னு வித விதமான அலங்காரத்தோட மூர்த்திகள். அப்படியே பிரமிக்க வைக்கும் ஒளி அலங்காரத்துடன், ஊரே ஜக ஜகன்னு இருந்தது. எல்லா இடத்திலும் பண்டாராங்கற  அன்ன தானம்.

    .மொத மொதல்ல 20,25 அடி உயரத்துல,நாக்க தொங்க போட்டுண்டு கன்னங்கறேர்னு இருக்கற பத்ரகாளிய, ராத்திரி 10,12 மணிவேளைல பார்த்துட்டு   வீட்டுக்கு வந்தா தூங்கவே முடியல. அவ்வளவு பயமா இருந்தது.
      இப்படியாக வட இந்திய தசரா அறிமுகமானது.





    அடுத்தது பெங்களூரில் பார்த்த நவராத்திரி. பெரிய பெரிய பங்களாக்களில், தங்களுடைய வீட்டின் ஒரு தளத்தையே ஒழித்து, அத்தனை வெளி நாட்டு, உள் நாட்டு பொம்மைகளுடன் கொலு.

     விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் வெத்தலை பாக்கில். பக்தி அலலது சிரத்தையை விட வெறும் ஆடம்பரம், படாடோபமான சிலரின் நவாத்திரி.

     கடைசியில் தஞ்சாவூர் நவராத்திரி. எல்லார் வீட்டிலும் கொலு. அநேகமாக எல்லாப் பெண் குழந்தைகளும் பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு,கொலுவில் பாட்டுப் பாடும் சுத்தமான அக்மார்க் கொலு. நமக்கேத்த நடுத்தர வர்க்கத்து நவராத்திரி.

     திரும்பவும் நார்த்துககே வந்தாச்சு. நேற்று தசரா காளி பார்க்க வெளியில் போனோம். எள் விழ இடமில்லாத கூட்டம் காளி பார்க்கவும், ராம்லீலாவில் ராவணனை எரிக்குமிடத்திலும். சிவனேன்னு சீனிவாசர் கோயிலுக்குபோய் வந்து நவராத்திரி கொண்டாடினோம்.

        இன்னும் எத்தன விதமான நவராத்திரி காத்திருக்கோ வாழக்கைல.
     .
            .எலலோருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்