Friday 19 December 2014

                                                      மார்கழியாம் மார்கழி


   
ஒவ்வொரு வருஷமும் மார்கழி எப்படா வரும்னு காத்திருக்கறவ நான். நிஜமாலுமே கண்ணன், காலத்தின் உருவெடுத்தால் மார்கழி மாதிரி தான் இருந்திருப்பான்.

     அப்படிப் பட்ட மார்கழி மேல் வெறுப்பே இருந்தது  ஒரு காலத்துல.
ஏழெட்டு வயசுல ஆரம்பிச்சது , இந்த மார்கழியோட மல்லுக்கட்டல்.    

     எப்பவும்  காலங்கார்த்தால  6 மணிக்கு  MS அம்மாவின் சுப்ரபாதம்   பாடி எங்களை  எழுப்பும்  அப்பாவின் ரேடியோ,  இந்த மார்கழி வந்தா 5:30க்கே எம்.எல்.வி  அவர்களின்   'மார்கழித் திங்கள்'னு திருப்பாவை  'பாடி உசுற வாங்கும்.

     ஏற்கனவே இந்த மாசத்துல  நடுநிசில வரும்  'சங்குஊதி' யோட சங்கு சத்தத்துல பயந்து நடுங்கி தூக்கம் போயி திரும்ப தூங்க ஆரம்பிக்கும்போது  குடுகுடுப்பைக்காரன் வந்து குறி சொல்ல ஆரம்பிச்சுடுவார். அவர் போனதும் சைஞ் சப்னு பஜனைக் கோஷ்டி வந்துடும்.

      அரைகுறை தூக்கத்துல போர்வைக்குள்ள சுருண்டு கிடக்கும் போதுதான் நம்ம வீரமணி ஐயாவோட'  பளளிக்கட்டு சபரிமலைக்கு' ஆரம்பிக்கும்.  அது என்ன ஊரையே எழுப்பி விட்டுடணும்னு ஒருவெறியோ இவங்களுக்கு, எங்கப்பாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்.

     எல்லாரும் போனதும் நிம்மதியான தூக்க-சொர்க்கத்துல இருக்கும்போது தான் திருப்பாவை..

     இந்த மாசத்து மேல வெறுப்பு வந்ததுக்கு  இன்னொரு காரணம்
அரைப்பரிட்சை.  இந்த குளிர்ல எழுந்து குளிச்சுட்டு ஸ்கூல் போறதே பெரிசு. இதல படிக்கவும் செய்யணும்னா ....

      பெரியவங்களுக்கு   என்னா,  பரிட்சை அன்னிக்கு விடிகாலைலயே எழுப்பி விட்ருவாங்க .  எழுந்ததும் காபி டம்ளரும் புத்தகமுமா படிக்கறோம் பேர்வழின்னு  வெந்நீர் அடுப்பைச் சுத்தி  உட்கார்ந்துடுவோம் 7 பேரும்.(கூட்டுக்குடும்பம்).  இதல சண்டை  வேற, குளிர்காய  யார் நெருப்பு கிட்டக்க  உட்காரர்துன்னு.  படிப்பெல்லாம் ஏது? வம்பு  தான்.

       மூணாவது கடுப்பு கோலம்.  கலர்ப்பொடி கலாசாரம் கிராமத்துக்கும் வந்ததும்,  நம் வீட்லயும் மார்கழி பூரா கலர்க்கோலம் தான்னு முடிவெடுத்து,   ராத்திரியே கோலமெல்லாம் செலக்ட் பண்ணி வச்சுட்டு அம்மாவோ  சித்தியோ கோலம் போட்டுட்டு,  ஊரே எழுந்தாச்சு, சூரியன் தலைக்கு மேலே வந்தாச்சுன்னு எதாவது சொல்லி, போய் கலர் போடுடின்னு நம்மள உலுக்கி  எழுப்பும்போது  தான், லைப்ல பண்ண முதல் முட்டாள்தனம்  இ்ந்த கலர்க்கோல ஐடியான்னு  தோணும்.

      இதவிட பெரிய கொடுமை பெருமாள் கோவில்ல திருப்பாவை ஒப்பித்தல் போட்டி ன்னு ஒண்ணு  ஒரு வருஷம் ஆரம்பிச்சது.  இருக்கற தமிழ்ச் செய்யுள படிக்கவே ஒம்பாடு எம்பாடா இருக்கு. இதுல இத வேற படிக்கணும்னா எரிச்சல் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க.

     அந்தக்காலத்துல நம்ம எரிச்சலால யாருக்கு என்னா? பெரியவங்க எங்க  பேரை கொடுத்து, படிச்சு ஒப்பிங்க பசங்களான்னா ... பத்திண்டு வரும் திருப்பாவையைப் பார்த்தா.  ஒண்ணு ரெண்டு  மனப்பாடம் பண்ணிட்டு அப்பா கண்லயே படாம சுத்துவோம்.

     இப்படியே 30 நாளும் போய், போகி வந்தால், பட்டையும், கம்பளியையும் தவிர்த்து வீட்டிலுள்ள அத்தனை துணிகளையும் தோய்க்கணும்கறது பாட்டி குடுக்கற வேலை. அவர் இருக்கும் வரை இது நடந்தது.

    மார்கழியிலேயே பிடிச்சது சூடான பெருமாள்கோவில் பொங்கல் மட்டும் தான்!

      போதும்டா சாமி,மார்கழி! ஆளைவிடுன்னு ஆயிடும் ஒவ்வொரு வருஷமும்.

       இதெல்லாம் பழைய கதை.

    வளர வளர அறிவும்,பக்தியும் வளர்ந்து,திருப்பாவை மட்டுமில்லாமல் நாலாயிரமும் நானே தேடிப் போய் படிக்க ஆரம்பித்து, என உள்ளத்தில் நாராயணனும் அவன் தேவிகளும் சப்பணமிட்டு அமர்ந்தபின் தான், 'தீக்குள் விரலை வைத்தால்' மட்டுமில்லாமல்  மார்கழியின் குளிரிலும் அவனை தொடமுடிவதை உணர  ஆரம்பித்தேன்.  
  
      அதுக்கும் மேல யாரும் எழுப்பாம 4:30க்கு எழுந்து கோலம் போட்டு குளித்து, பெங்களூர் லக்ஷ்மி கோயிலுக்கு 2 கிமீ நடந்து போய் திருப்பாவை சொல்லும்போது,  அதில்  பரமபதத்தையே  எனக்கு  பகவான் அருளினதை என்னன்னு சொல்ல. (  லீவு நாட்களில் அதி காலைல இருட்டுல  நான் தனியா போறேன்னு தானாகவே உணர்ந்து  என் 10 வயசு பிள்ளை, குட்டி சைக்கிள்ல என் கூடவே வரும்   )

           இந்த ஊரில்  டிசம்பர்ல  பகல்லயே 4-5 டிகிரி குளிர், கோலம் போட இடமே இல்லை. போக பக்கத்துல  கோயிலுமில்லை. இருந்தாலும்  சீக்கிரம் எழுந்து , மனசுலயித்து திருப்பாவை சொல்லறதுல வர ஆனந்தமிருக்கே! அடடா!

          'நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,...' உடன்   மார்கழியில் குளிராயும் வருகின்றான் ஆழிமழைக்கண்ணன்

          //பின்குறிப்பு - இதில் எதுவுமே மிகைப்படுத்தப்படவில்லை. சூனிய மாதம் என்று கிராமத்தில் மார்கழியில் இத்தனையும் நடந்தது 30 வருடங்கள் முன்பு வரை . இத்துடன் காலையில், பெருமாள் கோவிலில் நாதஸ்வரமும் வாசிப்பார்கள் மாதம் முழுவதும். //