Sunday 19 June 2016

                                தாயும் சேயும் ...


                 இன்று காலை மிகவும் மங்களகரமாக விடிந்தது.

      எங்கள் தெருவில் நிறைய மரங்கள் இருப்பதால், அக்கம்பக்கத்து பசுமாடுகளுக்கு ரிலாக்ஸாக அசை போட தோதான இடமாக ஆகி விட்டது.


     மாடுகள்லாம் கொட்டாய்களில் அடைந்திருந்தது 20ம் நூற்றாண்டில் வேணா இருக்கலாம். இப்பொழுதெல்லாம் போராடாமலே அதுங்களுக்கு சுதந்திரம் கொடுத்து,  தண்ணி தெளித்து துரத்தியாயிற்று.

     கறக்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுதும் அங்கிங்கெனாதபடி அது எங்க வேணா திரியலாம். அதுவும் இரவு 10 மணிக்கு மேல் மெயின் ரோடின் நடுவில் தான் ஒரு 10 மாடு கும்பலா, ரிலாக்ஸா, ரெஸ்ட் எடுக்கும். ஊருக்கு புதுசா யாராவது வந்து,  இராத்திரில கார் ஓட்டினாங்களோ... பகல்ல பாத்த அதே  ரோடு தான்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டாங்க. மாட்டு மந்தையாகி இருக்கும் ரோடு.


         எங்க ஊர் கவர்ன்மென்ட் என்ஜினியரிங் காலேஜ்ல , பசங்களுக்கு காலைல கல்லூரி போனதும் முதல் வேலை கிளாசிலிருந்து மாடுகளை துரத்தி, சாணி அள்ளுவது தான். இது ஜோக்கில்ல. உண்மை.


     இப்படி வழக்கமா எங்க தெருவுக்கு வர்ற மாடுகள்ல ஒண்ணுக்கு நேற்று பிரசவவலி.  இராத்திரி பூரா தவிச்சிருக்கு பாவம். விடிகாலைல நல்லபடியா பிரசவம் ஆகி தாயும் சேயும் நலம்.

     நாங்க அம்மா மாட்டுக்கு கோதுமை மாவு, வெல்லம், வாழைப்பழம், தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினதும் அதுக்கு தெம்பு வந்தது. கன்றும் பால் குடிக்க ஆரம்பித்து விட்டது.

     இதல கொடுமை என்னன்னா மாட்டுக்கு சொந்தக்காரன் காலைல 11 மணி வரை கூட வரலை.  அப்புறம் நாங்க வேலைல பிசியாகிட்டோம். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் மாடு கன்று இரண்டையும் காணோம்.

     சினை மாடு எப்ப கன்னு போடும்னு , மாட்டைப் பார்த்தாலே சாதாரணமானவங்களுக்கே கொஞ்சமாவது விளங்கும். கிராமங்களில் 1,2 மாடு உள்ளவர்கள் கூட, மாடு கன்னு போடப் போகும் நாட்களில் ஊருக்கு கூட போக மாட்டார்கள். பிரசவத்தில் என்ன வேணா நடக்கலாம். சில முதலுதவியெல்லாம் கூட செய்யவேண்டி வரும். அந்த அளவுக்கு கூட கரிசனம் இல்லாத என்ன  ஜன்மங்களோ.  ஊர்ல , தெருவுல பிளாஸ்டிக்கயும், பேப்பரையும், அழுகின காய்களையும் மேய்ந்துட்டு வந்து, பாலால பாத்திரம் நிரப்பினா சரி. அவர்களுக்கு வேண்டியது காசு. நமக்குத் தான் இது புதுசோ என்னவோ? பண்ணைல உள்ள எல்லா மாடுமே இப்படித் தான் கன்னு போடுதோ என்னவோ?