Tuesday 20 May 2014

            

        என் பையனும் கல்லூரிக்கு போனான்...


     ஒரு வழியாக பரிட்சை முடிவுகள் வந்து,  குழந்தைகளும், பெற்றோர்களும்
சிறிது நேரம் தங்களை ஆசுவாசப் படு்த்திக் கொள்ளும் நேரம் இது.
 
  ஒவ்வொரு தாய்க்கும் பிரசவம் எப்படி விசேஷமானதோ, தங்களுக்கு மட்டுமே  இப்படி ஒரு கஷ்டமும் வந்து, அதற்குப் பிறகு அளவிடமுடியாத சந்தோஷமும் கிடைத்தது என்று நினைக்கிறார்களோ, அதைப் போன்றது தான் குழந்தைகளை கல்லூரியில் சேர்ப்பதும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாய்  அமையும்  அந்த அற்புதமான காலகட்டத்தில் என்னுடைய அநுபவத்தின் பகிர்வு இங்கே.

  நாங்கள் வேறு மாநிலத்திலிருந்து  80 களின்  இறுதியில்  பெங்களூருக்கு   மாற்றலாகி வந்தோம் . என் மூத்த மகனை  நல்ல பள்ளியில்  8ம்   வகுப்பில்  CBSE  பாடத்திட்டத்தில் சேர்த்தோம் . 10 வகுப்பு வரை அதே பள்ளியில் படித்து தேர்வும் எழுதி விட்டான்.

      தேர்வு முடிவு வரும் முன்னரே 11-12  ம் வகுப்பு சேர்க்கைக்காக சில பேரை பள்ளி நிர்வாகம் தேர்ந்தெடுத்திருந்தது. அதில் என் பையனும்  ஒருவன்.

    .      இங்கிருந்து தான் எங்களுக்கு போறாத காலமே ஆரம்பித்தது.

      அவனுக்கு மருத்துவம்  படிக்க  விருப்பம்.  நல்ல மதிப்பெண்கள் வாங்குவதோடு,  மருத்துவ படிப்புக்கு இன்றியமையாத  தகுதிகளான   சகிப்புத்தன்மையும், அசூயைப்படாமையும  அவனுக்கு  இயற்கையாகவே  அமைந்திருந்தது..     .

 எங்களுடைய  நண்பர்களில்,  சில அநுபவஸ்தர்கள்   CBSE  யைவிட,   கர்நாடகா PUC யில் மதிப்பெண்கள் நிறைய வாங்கலாம், மருத்துவக் கல்லாரியில் இடமும் இலகுவாக கிடைக்குமென்று  அறிவுரை  கூறினர்.

      தெரிந்தவர்கள் சொல்கிறார்களே  என்று  அப்படியே  கடைபிடித்து, அவ்வளவு  நல்ல  பள்ளியின் அனுமதியிடத்தை வேண்டாமென்று சொல்லி   விட்டோம்.  அப்பொழுதெல்லாம்  இணையம்  பரவவில்லை. அதனால் அவ்வளவு சுலபமாக நாம் எல்லா விஷயங்களும் தெரிந்துவைத்துக் கொள்ள முடியாது. அனுபவமுள்ளவர்கள்  சொல்வதையும், செய்தித்தாள்களையும்  தான் நம்ப வேண்டும்.

     10ம் வகுப்பு முடிவும் வந்தது. அவனளவுக்கு ரொம்ப நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். கல்லூரிகளில் 11 ம் வகுப்புக்கு அப்ளை செய்தோம்.

     கல்லூரிகள் அனுமதிப்பை 3 தரப் பட்டியலில்  வெளியிடுவார்கள.  மிகுந்த நம்பிக்கையோடு முதல் பட்டியலில் அவன் பெயரைத் தேடினால், வரவில்லை.  அதுமட்டுமில்லாமல், கட்-ஆஃப்  மதிப்பெண்கள்  98% ல் இருந்தன. முதல் முறையாக பயப்பட ஆரம்பித்தோம். ஏனென்றால் இன்னும் 10  நாட்களில் கல்லூரி ஆரம்பித்து விடும். எதாவது ஒரு இரண்டாந்தர  கல்லூரியில் அதுவும் சிபாரிசுடனோ அல்லது  அன்பளிப்புடனோ  தான்   இடம் கிட்டும்.

      இரண்டாம் பட்டியலிலும் பெயர்  வராமல், 11 வதுக்கே விழி பிதுங்கி, வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டி ,கடைசியில்  3ம் பட்டியலில் பெயர் வந்து பழமைவாய்ந்த, புகழ்பெற்றவர்கள்  படித்த   நல்ல  கல்லூரியில்  பியூசி சேர்ந்தான். சரி இனிமேல் அடுத்தது மருத்துவக் கல்லூரி வாசல் படி தான் ஏறப் போகிறான் என்ற சந்தோஷத்தில் அவனது கல்லூரி நாட்கள் ஆரம்பித்தது. 2 ஆண்டுகள் வீடு ,கல்லூரி, சிறப்பு வகுப்புகளி்ல்  உருண்டோடி  விட்டன

      7 ஆண்டுகள் தொடர்ந்து  கர்நாடகா பள்ளியில் படிக்காதவர்கள், கல்லூரி சேர்க்கையின்போது  வேறு மாநிலத்தவர் பிரிவில் தான் வருவார்கள்.  என் மகனுக்கு 5 வருடம் தான் ஆகியிருந்தது. 

     அவன்  12வது முடித்த ஆண்டுக்கு முன் ஆண்டு வரை கர்நாடகாவில், வெளி மாநில மாணவர்களுக்கு என்று 10% மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரியில்  இட ஒதுக்கீடு  இருந்தது. சில அரசியல்வாதிகள் கல்லூரிகள் ஆரம்பித்து  அதிலுள்ள லாபத்தை அநுபவித்ததால், வெளி மாநிலத்தவர்களுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில்  ஏன்  இடம் கொடுக்கணும்  என்று,  நீதி  மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாணவர்களின்  நுழைவுத் தேர்வின் போதே  இந்த வழக்கு நடந்தது

       2 மாதங்கள் வரை தினமும் செய்திகளில் முதல் இடம் இந்த பிரச்னைக்குத்தான். வழக்கு முடிவுக்கு வராமல்  கல்லூரிச்சேர்க்கை ஆரம்பிக்க முடியாது. உள்ளூர் மாணவர்களும் சேரமுடியாது.

  ஜூலையில்  திறக்க வேண்டிய கல்லூரிகள் அக்டோபர் வரை கோர்ட்டின் முடிவுக்கு காத்திருந்தன. 5 மாதம்  இந்த வருடம் அவன் கல்லூரி போவானா மாட்டானா என்று தெரியாமல் கழிந்தது.
   

    கடைசியில் தீர்ப்பும் வந்தது. அந்தத் தீர்ப்பில் அரசுக் கல்லூரிகளில்  இவர்களுக்கு  இடம் கிடையாது என்றும், வேண்டுமென்றால் சுயநிதிக் கல்லூரிகளில் சேரலாம் என்றும்  நீதிமன்றம் தீர்ப்புக் கூறி, வெளி மாநிலத்தவர்களுக்காக கட்டணமும்  நிர்ணயித்தது.   மருத்துவத்திற்கு ரூ   2.25  லட்சம், பொறியியலுக்கு ரூ 1.10 லட்சம்  வருடாந்திர கட்டணம்.

   மே மாதம் முதல் தினமும் செய்திகளில் இந்த மாணவர்களின் எதிர்காலம் தான் விமர்சிக்கப்பட்டன
 
     என் மகனின் கர்நாடகா நுழைவுத்தேர்வு  CET  ராங்க் பொறியியலில் 40, மருத்துவத்தில் 70  அவன் 12 வதில் CBSE லேயே இருந்திருந்தால் IIT  அல்லது AIEEE  நுழைவுத் தேர்விலாவது  நல்ல ரேங்க் வாங்கியிருப்பான்.    



  இத்தனைக்கும் அவன் கர்நாடகாவில் 7 ம் வகுப்பிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறான். இவர்கள் நுழைவுத் தேர்வில் மாற்றம் கொண்டு வர நினைத்தால்  அதை  முன்பே செய்திருக்கலாம். என்னத்தச் சொல்ல!

  
     இந்த  முடிவு  வரும்போது  மாணவர்களுடைய மற்ற எல்லா பல்கலைக்கழக  நுழைவுத்தேர்வுகளும்  முடிவடைந்து விட்டன.
எல்லா பொறியியல் கல்லூரிகளும் 10% இட-ஒதுக்கீட்டில் அதிக கட்டணத்துடன் பிற மாநில மாணவர்களை சேர்த்துக் கொள்ள சம்மதித்தன .ஆனால் சில புதிதாக தொடங்கப்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்தான் பிறமாநிலத்தவர்களுக்கு இடம் கொடுக்க சம்மதித்தன. அதுமாதிரி கல்லூரியில் சேர்க்க பயமாக இருந்ததால் அவனுடைய கனவான மரு்துவப் படிப்பை விட்டு, கர்நாடகாவின் முதல் இடத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்தோம்.  ஒரு வருடம் முன்பு வரை வெறும் 8500/-Rs  ஆக இருந்த  பொறியில் கல்லூரி  வருடக் கட்டணம் 1.25 லடசம் ரூ வரை ஆனது   
    ஆனால் நான் இந்தப் பதிவை எழுதுவதின் நோக்கம்  இது மட்டுமில்லை.

   . என் பையன்  மின்னணுவியலில்  BE  பட்டம் பெற்று, பெரிய  MNC யில்  2 வருடம்  நிறய சம்பளத்துடன் வேலை பார்த்தான் .  இருந்தாலும், மேலே படிக்கவேண்டும் என்று  நல்ல வேலையை விட்டு விட்டு தன்  சொந்த முயற்சியால் , ஜெர்மனியில்  உதவித்தொகையுடன்  MS முடித்து,  இப்போது அமெரிக்காவில்,   பிரசித்தி பெற்ற  Ivy League  யூனிவர்சிடிகளில்  ஒன்றில்  Humanoid ல் PhD பண்ணுகிறான். அங்குள்ள  மாணவர்களுக்கு பாடமும்  நடத்துகிறான்  சில சமயம். 

  குறைந்த மதிப்பெண் வாங்கினால்,  நினைத்த கல்லூரியில்,  நினைத்த படிப்பு கிடைக்காவிட்டால், என எல்லாவற்றிற்கும் தாமும் கலங்கி குழந்தைகளையும் கலங்கடிக்கும் பெற்றோர்களே!  படிக்கிற ஆர்வமும் அறிவை வளர்க்க வேண்டுமென்ற  ஆசையுமிருந்தால்  எந்த குழந்தையோட  எதிர்காலமும்  வீணாப் போகாது.  எப்படியும் முன்னேறிவிடுவார்கள். அந்த
ஆர்வத்தை கொன்று விடாதீர்கள்

  

.