Thursday 21 January 2016

            சமர்ப்பணம்..... 

 

     


       எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு புரியல..

 5,6 வயசுல பாவாடை சட்டையோட இருக்கும்போதே கைக்குழந்தைகளை தூக்கி  கொஞ்சுபவள் அவள்.  சதா குட்டிப் பசங்களோட விளையாடுபவள்.  அவளுக்குன்னு ஒரு குழந்தை வந்தால் எப்படி இருந்திருப்பாள்... 


      நல்ல கணவன், மாமியார், நாத்தனார், மைத்துனர்னு அன்பான மாமியார் வீடு. அவளைத் தெரிந்தவர்கள், அவளுடன் பேசியவர்கள் அவள் சிரித்த முகத்தை மறக்கவே மாட்டார்கள். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு இடத்திலும் செல்லம் அவள்.


    பிரசவத்துல ரொம்ப கஷ்டப்பட்டுத் தான் பையனை பெற்றெடுத்தாள்.  . மொத்த குடும்பத்திற்கும் அவன் சொல்றது வேதம்.  அவன் வைத்தது சட்டம்.  செல்லமா வளர்த்தா கூட சமத்தாவே வளர்ந்தது குழந்தை.  அவ்வளவு துறுப்பான அறிவான குழந்தை அவன். அவள் உலகமே அவன் தான்.  அவளுக்கு மட்டுமின்றி மொத்த குடும்பத்தின் கண்மணியானான் அவன். அவன் என்ன சொன்னாலும் கேட்பார்கள்.

    10 வது முடித்து நல்ல மார்க் வாங்கியிருந்தும்,  மேத்ஸ், சயன்ஸ்னா 12th ல  entrance exam, அட்மிஷன்னு குழந்தை கஷ்டப்படும்னு காமர்ஸ் படிக்க வைத்த அப்பா அம்மா.
  
       12வதில்  நல்ல மார்க் வாங்கியதால்  அவங்க ஊர்ல சிறந்த கல்லூரி ஒன்றில் அவனுக்கு இடம் கிடைத்தது .  கல்லூரி திறக்க சில நாட்களே இருந்தது.

   12வது பரிட்சை முடிந்ததும் அவன் ஜிம்முக்கு போக ஆரம்பித்தான். சைக்கிளிலும் வீலிங் செய்பவன். சந்தோஷமா போயிட்டிருந்த வாழ்வில் திரும்ப முடியாத திருப்ப முடியாத திருப்பம் வந்தது. 


     திடீரென்று  ஒரு நாள் தொடையில் வலிக்க ஆரம்பித்தது அவனுக்கு. மருந்து தடவி,  ஒத்தடம் கொடுத்தும் வலி குறையாததால் டாக்டரிடம் போனார்கள்.

டாக்டர் இவர்களிடமே கேள்விகள் கேட்டு ஜிம் போவதால் தசை வலி என்று முடிவு கட்டி மருந்து,  ஊசி என்று muscle pain க்கு ட்ரீட்மென்ட் கொடுத்தார்.

      இப்படியே 2 மாதம் ஓடியும் வலி அதிகரித்ததேயன்றி குறையவில்லை. டாக்டருக்கும் சந்தேகம் வந்து ct scan எடுக்க சொன்னார். ..

    விழப்போகும் இடியைப்பற்றி எந்த அறிகுறியும் இல்லாமல், அப்பாவும் அம்மாவும் பையனுடன் டாக்டரைப் பார்க்க போனார்கள். எலும்பு முறிவு அல்லது தசையில் எதாவது பிரச்னை இருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ரிசல்டில் Metastatic Osteosarcoma என்று வந்திருந்தது. டீன் ஏஜ் வரை குழந்தைகளுக்கு குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு வரும் bone cancer. வாழ்க்கையே முடிவுக்கு வந்த நிலையில் இருந்த பெற்றோர்களை,  அன்று வரை குழந்தையாய் இருந்த 18 வயது பையன்,  தோள் தாங்கி வீட்டுக்கு அழைத்து வந்தான்.

  அதிர்ச்சியில் இருந்து மீண்டு,  சிகிச்சை ஆரம்பித்தார்கள்.  அவனுக்கு  4 chemo கொடுத்து, சிறந்த மருத்துவமனையில் இந்தியாவின் தலைசிறந்த   orthopedic oncologist surgeon  அவன் தொடை எலும்பை நீக்கிவிட்டு, செயற்கை எலும்பு பொருத்தினார்.

     எல்லா டீன் ஏஜ் குழந்தை போல அவன் கவலை கீமோவில் போன முடி வருமா என்பதே. கீமோ முடிந்ததுமே முடி வந்துவிட்டது.

     ஆபரேஷன் முடிந்து, மீதி 4 chemo மற்றும் physio therapy யும் முடிந்து அவன் அம்மா உதவியுடன் கல்லூரி போக ஆரம்பித்தான்.

     இது நடுவில் கல்லூரி வர இயலாததை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்ததும் அவர்கள் முழு ஒத்துழைப்பும் தந்தார்கள். அவன் பூரண குணமானதும் கல்லூரி வரலாம்  என்றும் , 2 செமஸ்டர் பரிட்சையையும் சேர்த்து எழுதவும் அனுமதி தந்தார்கள். 

    10 மாதம்  பட்ட கஷ்டம் மறந்து கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தான். அம்மாவின் உதவியுடன் சில நாட்கள் ஆட்டோவில் போனாலும், பிறகு பஸ்ஸிலேயே போக ஆரம்பித்தான். டிரைவர் கண்டக்டர்கள் பஸ்ஸை காலேஜ் வாசலில் நிறுத்தினாலும், மறுத்துவிட்டு பஸ் ஸ்டா
ப்பில் இறங்கி தான் செல்வான். கல்லூரியே அவனைப் பார்த்து ஆச்சரியப் பட்டது.  துளி தன்னிரக்கம், வெறுப்பு எதுவும் இல்லாமல் அவ்வளவு உயிர்ப்புடன் , ஊன்றுகோல் உதவியுடன் கம்பீரம் குறைவில்லாமல் வலம் வந்தான்.

     ஒருமாதம் தான் கல்லூரி போனான் . அதற்குள் திடீரென்று அவனுக்கு மூச்சத் திணறல்,  ஜுரம் வந்தது. மறுபடி lungs ct scan எடுத்ததில் 2 lungs பூராவும் கேன்சர் இருந்தது தெரிய வந்தது. முதல் இடியாவது தேவலாம் ஏதோ தேறிடுவான்னு நம்பிக்கைல நாளை ஓட்டின குடும்பம்,  இந்த அதிர்ச்சியில் நிலை குலைந்தது.

   காலேஜ் போன 1 மாசத்தின் சுகமான நினைவுகளின் உதவியால் வலி, வேதனை, சோகம், தன்னிரக்கம் எல்லாத்தையும் அந்த குழந்தை முழுங்கி விட்டு அடுத்த யுத்தத்துக்கு தயாரானது.

    திரும்பவும் முதலிலிருந்து கீமோ, ஆபரேஷன் கீமோ...  ஆண்டிபயாடிக் 4 நாள் சாப்பிட்டாலே வயிறெரிச்சல் நம்மால் தாங்க முடியாது. சின்னப்ப அமிர்தாஞ்சன் தடவினாலே எரியுதுன்னு ஊரை கூட்டும் அந்தக் குழந்தை, 14 கீமோ 2 major ஆபரேஷனை,  ஒரு சொட்டு கண்ணீரோ முகச்சுளிப்போ இல்லாம தாங்கித்து.

     ஒன்றரை வருஷத்துல 18 வயசுலிருந்து 81 வயதுக்கான முதிர்ச்சி அவன் பேச்சில்,  நடத்தையில். அத்தனை உறவினர்களிடமும் அவ்வளவு அன்பு, கரிசனம். யாரைப் பார்த்தாலும் Thumps-up சிக்னலும் சிரிப்பும் தான் அவன் முகத்தில். தான் படற வேதனையை விட, அப்பா அம்மாவின் பயம் கலந்த வேதனையை தாங்க முடியவில்லை அவனால். தான் இல்லாமல் போகும்போது,அவர்கள் எப்படி தாங்குவார்கள் என்ற ஒரு கவலை தான் அவனுக்கு.

     கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாத அவன், கடைசி நாட்களில் கேட்டது ms அம்மாவின் குறையொன்றுமில்லை தான். குறிப்பால் அவன் பெற்றோர்களுக்கு அவனுக்கு ஒரு குறையும் அவர்கள் வைக்கவில்லை என்று உணர்த்தியதாக இன்று நம்புகிறார்கள்.

     கடைசி கீமோ மட்டும் பாக்கி இருந்தது. இனி இது முடிந்து  வேறு ட்ரீட்மென்ட், கீமோ கிடையாதுங்கற சந்தோஷத்துடன் இருந்தார்கள்.

   ஹாஸ்பிடலில் இருந்து வந்த  2 நாளில் ஆரம்பித்த வயிற்றுப் போக்கு நிக்கவேயில்லை.

எந்த உணவும் அவனால் சாப்பிடவும் முடியவில்லை. திரும்பவும் ஆஸ்பத்திரி மருந்து ஊசி டெஸ்ட்...10 நாள் ஒண்ணும் சாப்பிடாம இருந்து இன்பெக்ஷன் குணமாகி கொஞ்சம் சூப்பும் , தயிரும் சாப்பிட்டான்...

    அத்தோட சரி. அதுக்கப்புறம் நடந்தத எழுத எனக்கு தெம்பில்ல..

     அவன் தன்னோட அம்மாக்கு 18 வயசுல குழந்தையாய் மறுபடி பிறந்து, எல்லா உபசாரமும், சேவையும் அவளிடம் பெற்று , ஒன்றரை வருஷத்துல ஓராயிரம் ஆண்டு வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்து விட்டு ஏமாற்றி விட்டு ஓடி ஒளிந்து விட்டான்.

     யார் அவன் முன்னாடி அழுதாலும் அவனுக்குப் பிடிக்காது. அவர்களை அறையை விட்டு போகச் சொல்லி விடுவான். கடைசியில் அவன் கேட்டதை செய்து தரும் அம்மா செய்த எதுவும் நாக்குக்கு ருசிக்க வில்லை. அம்மாவை தொந்தரவு செய்வதை தாங்க முடியாமல் அவளிடம் "நான் ஒரு நிமிஷம் அழட்டுமாம்மா"னு  பர்மிஷன் வாங்கி அவள் தோளில் சாய்ந்து 1 நிமிடம் அழுதது தான் அவன் இந்த கேன்சருடனான யுத்தத்தில் மனம் தளர்ந்தது.

     மற்றபடி உயர்த்திய கட்டை விரலுடனும்,வாக்கிங் ஸ்டிக்குடனும் அவன் போராட தயங்கவே இல்லை. கேன்சரால் அவன் உடலைத் தான் அழிக்க முடிந்தது. அவன் ஆத்மாவை, மனதை, தைரியத்தை நெருங்க கூட முடியவில்லை அந்த நண்டால்.

   கடைசியில் பேச தெம்பில்லாமல் போன போது, அவன் அம்மாவிடம்  கைவிரல்களை குவித்து உன் வாய்  குவிந்திருக்கக் கூடாது என்றும், பின் விரல்களை விரித்து சிரிப்பால் எப்பவும் மலர்ந்திருக்க வேண்டும் என்று சைகையால் தெரிவித்ததை சொல்லி, சொல்லி கதறும் அவளுக்கு என்ன பதில் சொல்வது ... 

என்றும் எங்களுடன் எங்கள் தைரியமாய், நம்பிக்கையாய் வாழப்போகும்

அஷ்வத்துக்கு சமர்ப்பணம்...